சூரியனும் புள்ளிமான்களும் – தமிழ் சிறுகதைகள்

ஒரு காட்டில் இரண்டு புள்ளிமான்கள் இணைப்பிரியாத நண்பர்களாக இருந்தன. எங்கு சென்றாலும் சேர்ந்தே தான் செல்லும்.

ஒரு நாள் மழை பெய்தது. மான்களால் விளையாட முடியவில்லை. குகைக்குள் ஓடி ஒளிந்து கொண்டன.

மழை நின்ற பிறகு வெளியே வந்த மான்கள் இன்னும் மழை வருமா என்று இரண்டு மான்களும் மேலே பார்த்தன. அப்போது மேகத்திற்கு உள்ளே இருந்து வெளியே வந்தது சூரியன். மான்கள் இரண்டும் சூரியனிடம், “இன்னும் மழை வருமா?” என்று கேட்டன. “நான் தான் வந்து விட்டேனே! இனி எப்படி மழை வரும்?”. என்று சொல்லி மான்களைப் பார்த்து சிரித்தது.

 “எங்களை பார்த்து ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டன. ”நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள்!. அதுதான் சிரிப்பு வந்துவிட்டது. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் யார்?” என்று கேட்டது சூரியன்.

 “நாங்கள்தான் அழகான இரண்டு புள்ளி மான்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள்” என்றன புள்ளி மான்கள். “சரி உங்களில் யார் திறமையானவர்கள்?” என்று கேட்டது சூரியன். 

“நாங்கள் இருவருமே திறமையானவர்கள் தான்” என்று சொன்னது மான்கள்.

சூரியன் சற்று யோசித்துவிட்டு, “சரி அப்படி என்றால் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதோ அங்கு ஒரு மரம் இருக்கிறது பாருங்கள் அந்த மரத்தை யார் முதலில் தொடுகிறார்களோ அவர்கள்தான் திறமையானவர்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு நான் ஒரு பரிசு தருவேன்.” என்றது சூரியன்.

Read Also : சொர்க்கத்தில் நரி

 பரிசு தருவதாக சொன்னதும் இரண்டு மான்களும் ஓடத் தொடங்கின. ஆனால் மரத்தை தொடாமல் நின்று கொண்டிருந்தன. அப்போது சூரியன், “ஏன் மரத்தை தொடாமல் அப்படியே நின்று கொண்டு இருக்கிறீர்கள்?” என்று கேட்டது. ஒரு மான் சொன்னது, “நான் என் நண்பனுக்காக விட்டுக் கொடுத்து விட்டேன்”. இன்னொரு புள்ளி மானும் “நானும் என் நண்பனுக்காக விட்டுக் கொடுத்து விட்டேன்” என்று சொன்னது.

 இதைக்கேட்டு பெரிதும் மகிழ்ந்த சூரியன், “அழகான இரண்டு புள்ளி மான்களே! உங்கள் ஒற்றுமை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன். நீங்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு நான் ஒரு வானவில்லை பரிசாக தருகிறேன். நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ அப்போது வானவில்லே வருக என்று சொன்னால் போதும். வானத்தில் அழகான வானவில் தோன்றும். நீங்கள் அதை பார்த்து ரசிக்கலாம்.” என்று சொல்லிவிட்டு சூரியன் விடைபெற்றது.

மான்கள் இரண்டும் மகிழ்ந்தன. அவருக்கு விருப்பமான நேரத்தில் வானவில்லை வரச்செய்து பார்த்து ரசித்தன.

கதையின் நீதி:

இந்த கதையிலிருந்து என்ன தெரிந்து கொண்டோம் என்றால், “விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *